NEWS :
TRBNEWS Welcomes You

12 May 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: "60% கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க வாய்ப்பு இல்லை'

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண் 60 சதவீதம் என்பதைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-
தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது.
அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:-
பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.
ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

1 comment:

  1. இடஒதுக்கீடு கொள்கைக்கு முக்கியத்துவம் தர ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்களில் மாற்றம் தேவை-கருணாநிதி
    சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில்கள் அறிக்கை: ஆகஸ்ட் 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளதே? 3ம்முறையாக இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர்என்று எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து விநியோகிக்க போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது,இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படியான விதியாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காககடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2 முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாகஇல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்த தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ம்தேதியும் நடக்கவுள்ளன. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60சதவீதம். 2 முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும்என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. தேர்ச்சிபெற அனைத்து பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான்வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரை போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்தில்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது,தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். ஆந்திராவில்உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும், அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 என்றும், ஒடிசாவில்உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக அரசு அனைத்து பிரிவினருக்கும்60 சதவீதம் மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, பெரியாரின்சமூகநீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதுமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆகஸ்ட்டில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இந்தமுறையாவது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்வுக்கானமதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வரவேண்டும்.

    ReplyDelete

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.