NEWS :
TRBNEWS Welcomes You

07 September 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் கணிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்வு நேரம் (1 ½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்கள் உள்ள நிலையில், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காததால் கிட்டதட்ட 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை 4 லட்சம் பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில் 8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது.

முந்தைய தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இரண்டிலும் சரி தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து எழுந்தது. கேள்விகள், விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நிபுணர் குழுவின் முடிவின்படி உரிய மதிப்பெண் வழங்கப்படும்.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை அகில இந்திய அளவில் 7 ½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு 2-ந்தேதி வெளியானது. மொத்தம் 77 ஆயிரத்து 634 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது 10 சதவீத தேர்ச்சி, முந்தைய தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். 

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.