சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள்,
அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர்
அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால்,
சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம்
கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான
எழுத்துத் தேர்வை, மே, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில்,
1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவிற்குப்பின், பணியிடத்திற்கு ஒருவர் வீதம், சான்றிதழ்
சரிபார்ப்பு முகாமை, ஆகஸ்ட்டில், டி.ஆர்.பி., நடத்தியது. முன்னதாக,
கேள்விகளுக்குரிய விடைகளை (கீ-ஆன்சர்) டி.ஆர்.பி., வெளியிட்டதும், பல
விடைகள் தவறானவை என, விண்ணப்பதாரர் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில், ஐம்பதுக்கும் அதிகமாக தவறான விடைகளை, டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, முடிவு வெளியிடப்பட்டு உள்ளதால்,
ஒட்டுமொத்த தேர்வுப் பட்டியலும் ரத்து செய்யப்படுகிறது என, உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது. 3 வாரங்களுக்குள், அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு
செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், நீதிமன்றம்
தெரிவித்தது.
இதையடுத்து, அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., இறங்கி உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: "இடஒதுக்கீடு முறையை
சரியாக கடைபிடிக்கவில்லை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தான், தேர்வுப் பட்டியலை
தயாரித்தோம். உள் ஒதுக்கீடு தொடர்பாக, சில நடைமுறைச் சிக்கல்கள்
ஏற்படுகின்றன. அதை நிவர்த்தி செய்ய, அரசாணையில் திருத்தம் கொண்டு வர
வேண்டும்.
கேள்விகளுக்குரிய விடைகளை, டி.ஆர்.பி., தயாரிப்பதில்லை. ஒவ்வொரு பாட
வாரியாக, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள்
தான் தயாரிக்கின்றனர். ஒரு நிபுணர் குழு தயாரித்த, கீ-ஆன்சரை, மற்றொரு
நிபுணர் குழு, தவறு என்கிறது. அப்படி இருக்கும் போது, எங்களை எப்படி குறை
கூற முடியும்?
எனவே, தவறாக கேள்வி கேட்டாலோ, கீ-ஆன்சர்களை தயாரித்தாலோ ஏற்படும்
குளறுபடிகளுக்கும், பிரச்னைகளுக்கும், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே
பொறுப்பேற்க வேண்டும் என, விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர உள்ளோம்.
"ஸ்கேன்' செய்யப்பட்ட விடைத்தாள்கள், அப்படியே இருக்கின்றன. எனவே,
விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில், எவ்வித சிக்கலும் ஏற்படாது.
உயர் நீதிமன்றம் நிர்ணயித்த கால கெடுவிற்குள், விடைத்தாளை மறுமதிப்பீடு
செய்து, புதிய பட்டியலை வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள்
தெரிவித்தன.
தேர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்: சான்றிதழ்
சரிபார்ப்புக்குப்பின் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,
வெளியிடவில்லை. எனினும், பணிக்கு, ஒருவர் என்ற வீதம், சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதால், இதில் பங்கேற்ற அனைவரும், தங்களுக்கு
வேலை கிடைத்து விட்டதாக, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். இந்நிலையில்,
மறுமதிப்பீடு செய்வதன் மூலம், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்றவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.